தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஆண்டுதோறும் 3.5 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12ம் தேதி காவிரி நீர் திறந்து விடப்படும்.
ஆனால், இந்த ஆண்டு குறுவை விவசாயத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து போதிய நீர் கிடைக்கவில்லை. அதே போல மின்சார தட்டுப்பாடும் நிலவுவதால் மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீரைப் பெறவும் முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு வெறும் 40,000 ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி நடந்து வருகிறது. அதுவும் முழுக்க முழுக்க பம்புசெட் பாசனத்தை மட்டுமே நம்பி இந்த விவசாயம் நடந்து வருகிறது. அந்த அளவுக்கு காவிரி வறண்டு கிடக்கிறது.
மும்முனை மின்சாரம் இருந்தால் மட்டுமே பம்பு செட்களை இயக்க முடியும் என்ற நிலையில் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு தினமும் 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதை நம்பி விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், இப்போது வெறும் 7 மணி நேரம் மட்டுமே மின் சப்ளை உள்ளது.
இதனால் மேட்டூர் தண்ணீரும் இல்லாமல் பம்பு செட்களையும் இயக்க முடியாமல் விவசாயிகள் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இந்த மின்தடை காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடியால் மட்டும் இதுவரை ரூ.550 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
குறுவை பயிரோடு பிரச்சனை தீரப் போகிறதா என்றால் அது தான் இல்லை. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என்பதால் அடுத்தபடியாக சம்பா பருவ நெல் சாகுபடியும் பெரும் சிக்கலை சந்திக்கப் போகிறது.
இந்த 3 மாவட்டங்களிலும் 10 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகள் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அதில் பாதி அளவுக்குக் கூட சம்பா சாகுபடி நடக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது.
மழையும் இல்லை, மேட்டூரிலிருந்து நீரும் வரவில்லை, மின்சாரமும் இல்லை. இதனால் தமிழகத்தில் நெல் உற்பத்தி இந்த ஆண்டு மிகக் கடுமையாக பாதிக்கப்படவுள்ளது.
கொடநாட்டுக்கு இந்த பயிர்களின் மரணக் குரல் கேட்கிறதா?