வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31ம் தேதி தான் கடைசி நாள். சி.ஏ. படித்தவரை அணுகி உங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம். அல்லது நீங்களாகவும் செய்யலாம்.
நீங்களாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது(ஆன்லைன் மற்றும் நேரடியாக) கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் வருமாறு,
உங்களின் வருமானம் ரூ.10 லட்சத்திற்கு அதிகமாக இருந்தால் வருமான வரி கணக்கை கண்டிப்பாக ஆன்லைனில் தான் தாக்கல் செய்ய வேண்டும். இதை ஒருபோதும் மறக்க வேண்டாம்.
www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பான் எண்ணை வைத்து பதிவு செய்யவும். உங்கள் பான் எண் தான் உங்களின் யூசர் ஐடி ஆகும். அதன் பிறகு இணையதளத்தில் குறிப்பிட்டவாறு வருமான வரி கணக்கை நீங்களாகவே தாக்கல் செய்யலாம் அல்லது நிபுணர்கள் உதவியை நாடலாம்.
உங்களுக்கு பொருத்தமான வருமான வரி கணக்கு தாக்கல் விண்ணப்பத்தை தேர்வு செய்து பூர்த்தி செய்யவும். உதாரணமாக நீங்கள் ஊதியம் வாங்குபவராக இருந்தாலோ அல்லது வீடு மற்றும் வட்டி மூலம் வருமானம் வரும் பென்ஷன்தாரியாக இருந்தாலோ ஐடிஆர்-1 விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். அந்த இணைதளத்திலேயே எந்த விண்ணபத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும் என்ற விளக்கம் இருக்கும்.
ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் அதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அடித்தம், திருத்தம் இல்லாமல் பூர்த்தி செய்யவும். ஒரு டப்பாவுக்குள் ஒரு எழுத்தை மட்டுமே எழுத வேண்டும். இல்லையென்றால் உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
கடைசி நிமிடத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் விண்ணபத்தை பூர்த்தி செய்தாலும் கூட அவசர, அவசரமாக பூர்ததி செய்ய வேண்டாம். அவ்வாறு செய்தால் கண்டிப்பாக ஏதாவது பிழை ஏற்படும். உங்களைப் பற்றிய தகவல்கள், பான் எண், இமெயில் ஐடி, வங்கி கணக்கு எண், எம்.ஐ.சி.ஆர். கோடு ஏதாவதை தவறாக எழுதிவிடக்கூடும்.
ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது தவறாமல் உங்கள் வங்கிக் கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். உங்களுக்கு ஏதாவது பணம் திரும்ப வரவேண்டி இருப்பின் கண்டிப்பாக ஆன்லைனில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவும்.