டெல்லி: பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கு விவரத்தை மாதந்தோறும் இனி ஆன்லைனில் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது.
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆர்.சி. மிஸ்ரா கூறியதாவது:
வருங்கால வைப்பு நிதியானது 50 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டது. இவர்கள் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் இணையதளத்தில் (http://www.epfindia.com) சென்று தங்களது கணக்கு பற்றிய விவரங்களை சேகரித்துக் கொள்ள முடியும்.
ஆன்லைனில் தகவல்களைப் பெற்றுக் கொள்வதுடன் வருங்கால வைப்பு நிதி அமைப்பை அதிகம் பயன்படுத்துவோருக்கு இ- பாஸ்புக் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலமாக வருங்கால வைப்பு நிதியைக் கோருவதற்கான வசதிகளையும் செய்து கொடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அனைத்து மண்டல அலுவலகங்களிலும் இதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதில் 80 விழுக்காடு பணி நிறைவடைந்துவிட்டது.
தற்போது தங்களது கணக்குகளில் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வோர் வழக்கமான முறையில்தான் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் தொகையை கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.