சென்னை: தஞ்சை பெரியகோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தஞ்சை பெரியகோவில் கட்டி ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நிறைவு விழா கடந்த 2010ம் ஆண்டு திமுக வெகு சிறப்பாகக் கொண்டாடியது. அப்போது தஞ்சை பெரிய கோவிலின் உருவமுள்ள ரூ.5 நாணயத்தை அப்போதைய முதல்வர் கருணாநிதி வெளியிட்டார். தற்போது பெரிய கோவிலின் 1,000வது நிறைவு விழாவையொட்டி ஆயிரம் ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஒரு பக்கம் இந்திய அரசின் சிங்க முத்திரையும், நாணயத்தின் மதிப்பும் பொறிக்கப்பட்டிருக்கும். மறுபக்கம் தஞ்சை பெரிய கோவிலின் முகப்பு தோற்றமும் ராஜராஜ சோழனின் உருவமும் இடம் பெறும். இந்த நாணயம் இரண்டுவித உலோக கலவையால் உருவாக்கப்படுகிறது.
ஒன்று 50 சதவீதம் வெள்ளி, 40 சதவீதம் செம்பு, 5 சதவீத துத்தநாகம், 5 சதவீத நிக்கல் கொண்டு செய்யப்படும். மற்றொன்று 80 சதவீத வெள்ளி, 20 சதவீதம் செம்புக்கலவையும் கொண்டு உருவாக்கப்படும்.
இந்த 2 வகையான ஆயிரம் ரூபாய் நாணயங்கள் விரைவில் வெளியிடப்படுகின்றன. ஆனால் இந்த நாணயத்தைப் பொதுமக்கள் பயன்படுத்த முடியாது. தஞ்சை பெரியகோவிலின் 1000வது ஆண்டு விழா நினைவாக வாங்கி வைத்துக் கொள்ளலாம். முதல் வகை நாணயத்தின் விலை ரூ.4,435 ஆகும். மற்றொரு நாணயத்தின் விலை ரூ.4,775 ஆகும். ஆகஸ்டு 31ம் தேதிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கே சிறப்பு நாணயம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications