
செபி அமைப்பின் தலைவராக யூ.கே.சின்ஹா நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் ஐ.பி.எ.ஸ். அதிகாரியான ஜூலியன் ரிபைரோ உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கைத் தொடர்ந்தார். அதில், செபி தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான விதிமுறைகள், தனியார் நிறுவனங்களின் நிர்பந்தப்படி மாற்றப்பட்டுள்ளன. இத்தேர்வுக்காக ஏற்கெனவே இருந்த 3 உறுப்பினர் குழுவுக்குப் பதிலாக 5 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டது தவறு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இந்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி மறுத்துவிட்டது. இது தனிநபருக்கு எதிரான தனிப்பட்ட குற்றச்சாட்டாக இருக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.இதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு பொதுநலன் வழக்கை ரிபைரோ தாக்கல் செய்தார்.
அதில், செபி அமைப்பின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நிதி அமைச்சரின் அதிகாரத்தை எதிர்த்தும், இதற்கான விதிமுறைகளை எதிர்த்தும் புகார்கள் கூறப்பட்டிருந்தன. இம்மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications