டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான தொலைத் தொடர்புத் துறை முன்னாள் இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா இன்று சாட்சியம் அளிக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஸ்ரீவாஸ்தவா நேற்று திங்கள்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் தமக்கு உடல்நலக் குறைவு இருப்பதால் இன்று ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனியிடம் அனுமதி கேட்டிருந்தனர். இதை நீதிபதி ஓபி சைனி ஏற்றுக் கொண்டு இன்று ஆஜராக அனுமதி அளித்தார்.
முன்னதாக சிபிஐ போலீசாரிடம் ஸ்ரீவாஸ்தவா அளித்த வாக்குமூலத்தில், அலைக்கற்றை உரிமம் கோரி பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெற 2007-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி கடைசி நாள் என கோப்பில் எழுதினேன். ஆனால், அப்போதைய மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் அறிவுறுத்தலின்படி விண்ணப்பங்களைப் பெறும் நாளை முன்தேதியிட்டு செப்டம்பர் 25 என மாற்றினேன். இந்த விவகாரம் தொடர்பாக ராசாவின் தனிச் செயலராக இருந்த ஆர்.கே. சந்தோலியா செப்டம்பர் 24-ம் தேதி என்னைச் சந்தித்தார். அதே நாளில் யூனிடெக் நிறுவனத்தின் விண்ணப்பமும் சமர்ப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2 ஜிஅலைக்கற்றை கோரி இனி வரும் விண்ணப்பங்களை ஏற்க வேண்டாம் என சந்தோலியா எனக்கு அறிவுறுத்தினார் என்று ஸ்ரீவாஸ்தவா கூறியிருந்தார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் முக்கியமானதாகக் கருதப்படுவது விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை திடீரென முன்கூட்டியே மாற்றியதுதான். இதில் ஸ்ரீவாஸ்தவாவின் சாட்சியம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது..