திருவனந்தபுரம்: வங்கிக்கு நற்சான்று வழங்க ரூ.50,000 லஞ்சம் வாங்கிய பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் உள்ளூர் தலைமை அலுவலகத்தில் முதுநிலை மேலாளராக பணியாற்றியவர் விகாஸ் தும்கூர். அவர் தமிழ்நாடு, கேரளாவில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைகளுக்கு சோதனை நடத்த செல்வது வழக்கம். கடந்த வாரம் கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்று சோதனை நடத்தினார். அப்போது வங்கியில் முறைகேடுகள் நடத்திருப்பதாக விகாஸ் வங்கி மேலாளர் ராஜீவிடம் கூறினார். இது பற்றி தலைமை அலுவலகத்திற்கு புகார் கடிதம் எழுதப் போவதாகவும், அப்படி செய்தால் உங்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அவர் ராஜீவை மிரட்டினார்.
வங்கிக்கு நற்சான்று வழங்க வேண்டுமானால் ரூ.50,000 லஞ்சம் தர வேண்டும் என விகாஸ் கேட்டார். பணத்தை ஏற்பாடு செய்ய இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட ராஜீவ் எர்ணாகுளத்தில் உள்ள தனது வங்கி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கொச்சி சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ரசாயனம் தடவப்பட்ட ரூ.50,000 ரொக்கம் ராஜீவிடம் கொடுத்து அதை விகாசிடம் கொடுக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவரும் அந்த பணத்தை விகாசிடம் கொடுத்தார். அப்போது வங்கியில் வாடிக்கையாளர் போல் மாறுவேடத்தில் இருந்த சிபிஐ அதிகாரிகள் விகாசை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டார்.