டெல்லி: இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்புத் துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக காசியாத் ஹீர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஏர்செல் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கிறது மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம். ஏர்செல் நிறுவனம் கடந்த ஜனவரியில் மறுசீரமைக்கப்பட்ட போது சிஇஓவாக இருந்த குர்தீப்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து முதன்மை நிர்வாகியாக பாஸ்கல் பொறுப்பேற்றார்.
ஏர்செல் நிறுவனமானது கடந்த ஆண்டு தமது வர்த்தகத்தை இரண்டு பிரிவாகப் பிரித்தது. ஒன்று ஆபரேஷன்ஸ் டிவிசன். மற்றொன்று நெட்வொர்க் டிவிவிசன். தற்போது காசியாத் நிர்வாகத்தின் கீழ் அனேகமாக இந்த இரண்டு பிரிவுகளும் ஒன்றாக்கப்படக் கூடும். மேலும் பாஸ்கல் என்ன பொறுப்பு வகிப்பார்? அல்லது மலேசியாவுக்கு சென்றுவிடுவாரா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஏர்செல்- மேக்சிஸ் பின்னணி
ஏர்செல் நிறுவனமானது சிவசங்கரனிடம் இருந்தது. ஏர்செல் நிறுவனமானது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்திருந்தது. அப்போது மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல்லின் விண்ணப்பிங்கள் மீது தொடர்ச்சியான ஆட்சேபனைகளைத் தெரிவித்துக் கொண்டே தாமதித்து வந்தார். பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியபோதுதான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கிடைத்தது.
அதாவது ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க வேண்டும் என்று தயாநிதிமாறன் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால்தான் தாம் ஏர்செல்லை விற்க வேண்டியது வந்தது என்று சிவசங்கரன் கூறியிருந்தார். இதையே சிபிஐயிடம் புகாராகவும் தெரிவித்திருந்தார். .
இந்த மேக்சிஸ் நிறுவனமானது தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன்குழும நிறுவனத்தில் ரூ600 கோடி அளவில் முதலீடு செய்திருக்கிறது. ஏர்செல் நிறுவனத்தை கைமாற்றியதன் பின்னணியிலும் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததன் பயனாகவும் மேக்சிஸ் நிறுவனம், சன் குழுமத்தில் முதலீடு செய்திருக்கிறது என்பது மத்திய புலனாய்வுத் துறையின் புகார்.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கில் தயாநிதிமாறன், மலேசியாவின் மேக்சிஸ் ஆகியவை மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.