மும்பை: நடப்பு நிதி ஆண்டில் வரி வசூல் குறைந்ததால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நிதிப் பற்றாக்குறையானது 5.6 விழுக்காடாக உயரக் கூடும்.
நடப்பு நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறையின் அளவு என்பது 5.1 விழுக்காடு வைத்திருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால் மறைமுக வரி வசூஇப்பில் பின்னடைவு ஏற்படக் கூடிய நிலையே இருக்கிறது. மேலும் அரசாங்கத்தின் செலவும் அதிகரித்து வருகிறது. இதனால் நிதிப் பற்றாக்குறை என்பது இலக்கைத் தாண்டி 5.6 விழுக்காடாக உயரலாம்.
இதே நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில் கடந்த நிதி ஆண்டின் முதலாவது காலாண்டு நிதிப் பற்றாக்குறை 17.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.ஆனால் நிதி நிலை அறிக்கையில் 0.8 விழுக்காடுதான் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. அரசின் செலவும்கூட நிதி நிலை அறிக்கையின் கணிப்பீட்டுக்கு எதிராக 19.3 விழுக்காடு அதிகரித்துள்ளது.
மேலும் வரியல்லாத வருவாய் 32.4 விழுக்காடு அளவுக்கு முதலாவது காலாண்டில் உயரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் 16.3 விழுக்காடுதான் வரியல்லாத வருவாய் கூடுதலாக கிடைத்தது. நிதிநிலை அறிக்கை மதிப்பீட்டை விட 21 விழுக்காடு இது அதிகம் என்றாலும் இது தொடர்ந்து நீடிக்குமா என்ற கேள்வியை தற்போதைய பொருளாதார மந்த நிலை எழுப்பியிருக்கிறது.
வரும் காலாண்டிலும் கூட நிறுவன வரி, உற்பத்தி வரி, சுங்க வரி வசூல் சரிவடையக் கூடும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.