அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள 2012-ம் ஆண்டுக்கான சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு செயல் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் சட்ட விரோதமான வழிகளில் சம்பாதிக்கப்படும் கறுப்பு பணம், ரியல் எஸ்டேட், தேர்தல் பிரசாரம் உட்பட பல வழிகளில் செலவிடப்படுகிறது' என, அமெரிக்க வெளியுறவுத் துறையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஏற்றுமதி
உலக அளவில் இந்தியாவிலிருந்துதான் அதிகளவு கேட்டமைன் போதைப் பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. தென்மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு இடையில் இந்தியா அமைந்திருப்பதால் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு போதைப் பொருளை மாற்றக் கூடிய இடமாக இந்தியா இருந்து வருகிறது.
வெளிநாடுகளில் இருந்து கடத்தப்பட்டு வரும் ஹெராயின், ஓபியம் மற்றும் கோகெய்ன் ஆகியவை இந்தியாவில் இருந்தே பிற நாடுகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றன. கேட்டமைன் உள்நாட்டிலிருந்தே பெருமளவு பிறநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. கேட்டமைன் தயாரிப்புக்கு பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் சில நிறுவனங்களுக்கு உரிமம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றை அளவுக்கு அதிகமாக உற்பத்தி செய்து பதுக்கி வைக்கு விற்பனை செய்யும் கடத்தல் தொழிலும் ஜோராகவே நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் ரூ500 கோடி அளவுக்கு இந்தியாவில் இருந்து கேட்டமைன் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக கேட்டமைன் 1கிலோ ரூ35 ஆயிரம் ரூபாய்க்கு மருந்து நிறுவனங்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதையே கடத்தல் சந்தையில் விற்பனை செய்தால் 1 கிலோவுக்கு ரூ10 லட்சம் கிடைக்கிறது. இதனால்தான் இந்தியாவில் கேட்டமைன் போதைப் பொருள் கடத்தல் கொடிகட்டிப் பறக்கிறது.
இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில மருந்துப் பொருட்கள் வெளிநாடுகளில் போதை மருந்து வகையில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றை இணையதளங்களில் செயல்படும் சட்டவிரோத பார்மசிகள் மூலம் கடத்தப்பட்டும் வருகின்றன.
கறுப்புப் பணம்- ஹவாலா
இப்படிப் போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஊழல் போன்று சட்டவிரோதமாக சம்பாதிக்கும் கறுப்புப் பணத்தை ரியல் எஸ்டே தொழிலிலும் கல்வித் துறையிலும் முதலீடு செய்திருக்கின்றனர். மேலும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தின் மூலமாகவும் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவை இலக்கு வைத்துள்ளன. இந்தியாவில் உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் பரவி இருக்கின்றன. வெளிநாடுகளில் இருந்து ஹவாலா முறையில் இந்த அமைப்புகளுக்கு பணம் வந்து சேருகின்றன. இதேபோல் ரூபாய் நோட்டுகளை கடத்திவருவதன் மூலமும் இந்த அமைப்புகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2010 முதல் 2011-ம் ஆண்டு ஏப்ரல் வரை பல ஆயிரம் பணவர்த்தனைகள் இத்தகைய அமைப்புகளுக்கு சென்றனவா? என்பது குறித்து சந்தேகிக்கப்பட்டுள்ளன. ஹவாலா பணமானது வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், வீட்டு வசதி நிறுவனங்கள், சீட்டு கம்பெனிகள், வழிபாட்டு தலங்கள், அறக்கட்டளைகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் பங்குச் சந்தை வழியே இந்தியாவுக்குள் கொண்டுவரப்படுகின்றன என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.