மும்பை: மனைவியின் பெயரில் வீடு வாங்கினால் என்னென்ன நன்மைகள் அடையலாம் என்று பார்ப்போம்.
மனைவியின் பெயரில் வீடு வாங்கினால் அடடா என் கணவருக்கு என் மீது எவ்வளவு பாசம் என்று அவர் உச்சி குளிர்ந்துபோய்விடுவார். மனைவியின் பெயரில் வீடு வாங்கினால் பத்திரப் பதிவு கட்டணம் குறைவு என்பது தான் சிறப்பான விஷயம். உதாரணமாக டெல்லியில் வீடு வாங்கினால் பெண்கள் 4 சதவீதமும், ஆண்கள் 6 சதவீதமும் பத்திரப்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நீங்கள் வீடு வாங்கி அதை உங்கள் மனைவிக்கு பரிசாக அளித்தாலும் பத்திரப்பதிவு கட்டணம் குறைவே.
இது குறித்து நைட் பிரான்க் இந்தியாவின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் நௌஷத் பஞ்வானி கூறுகையில்,
பெண்கள் பெயரில் அதிக சொத்துக்கள் இருந்தால் அவர்களின் பொருளாதார நிலை உயரும். பெரும்பாலான வட மாநிலங்களில் ஆண், பெண் விகிதம் சமமாக இல்லை. அதனால் பெண்களை ஊக்கும்விக்கும் பொருட்டே பத்திரப்பதிவில் அவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. பெண்கள் பெயரில் வாங்கப்படும் சுமார் 75 சதவிகித சொத்துக்கள் வர்த்தக நோக்குடன் வாங்கப்படுகிறது. பத்திரப்பதிவு கட்டணம் குறைவு என்பதால் அவர்கள் பெயரில் வாங்கி குறுகிய காலத்தில் அதை விற்கின்றனர். இதன் மூலம் குறைந்த அளவு லாபம் என்றாலும் அது கிடைக்கிறதல்லவா என்றார்.
உங்கள் மனைவி பெயரில் வீடு வாங்க முடியவில்லை என்றால் உங்கள் இருவரின் பெயரிலும் கூட்டாக வாங்குங்கள். அவ்வாறு வாங்கினால் டெல்லி உள்பட சில மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தில் 1 சதவிகிதம் குறைக்கப்படும்.
மனைவி பெயரி்ல் வீட்டை வாங்கினால் மட்டும் போதாது. சொத்துக்களில் இருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ உங்கள் மனைவிக்கு வரும் வருமானம் உங்கள் வருமானத்துடன் இணைக்கப்பட்டு வரிவிதிக்கப்படும்.
அதாவது சொத்து வாங்கும்போது மனைவி தன் பங்கிற்கு பணம் முதலீடு செய்யவில்லை என்றால் அந்த சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் கணவனின் வருமானத்துடன் சேர்க்கப்பட்டு வரி செலுத்த வேண்டியிருக்கும். அதற்கு பதிலாக கணவனே கொஞ்சம் பணத்தை மனைவிக்கு கடனாகக் கொடுத்து அவர் அந்த பணத்தை சொத்து வாங்க கொடுத்தால், அந்த சொத்தில் இருந்து வரும் வருமானம் கணவனின் வருமானத்தில் சேர்க்கப்படாது.