இலங்கை ரயில்வே துறையின் விரிவாக்கத்திற்கு பயன்படும் வகையில், 6 பெட்டிகளை கொண்ட 20 புதிய ரயில்களை தயாரித்து அளிக்குமாறு, கடந்த 2009ம் ஆண்டு சென்னையில் உள்ள ஐசிஎப் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
ரூ.120 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தபடி, கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் முறையாக சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 6 பெட்டிகள் கொண்ட ரயில் தயாரிக்கப்பட்டது. இதுவரை 18 ரயில்களின் தயாரிப்பு பணிகள் முடிவடைந்து, கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 ரயில்களின் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேற்கண்ட ரயில் பெட்டிகளின் மீது சிவப்பு, நீலம், வெள்ளை வண்ணங்கள் தீட்டப்பட்டு, பணிகள் முழுவதும் முடிவடைந்த பிறகு, வரும் 2 மாதங்களில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதில் பயணிகள் பெட்டி ஒவ்வொன்றும் 30 முதல் 35 டன் எடை கொண்டதாகவும், எஞ்சின்கள் 75 டன் எடை கொண்டதாக உள்ளது. பயணிகள் பெட்டிகளில் சாதாரண மற்றும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-12 நிதியாண்டில் ஐசிஎப் நிறுவனம், மின்சார ரயிலுக்கான 405 பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயில் இயக்கத்திற்காக 48 குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் உட்பட மொத்தம் 1,511 ரயில் பெட்டிகளை தயாரித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் ஐசிஎப் தொழிற்சாலை விரிவுப்படுத்தப்பட உள்ளதால், வரும் நிதியாண்டில் 1,600 ரயில் பெட்டிகளை தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.