கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அங்கு 2,500 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது கிரீஸ் நாடு இதுவரை கண்டிராத தற்கொலைகள் எண்ணிக்கையாகும்.
தா நியா என்ற கிரீஸ் நாட்டு பத்திரிக்கை நாடு முழுவதும் நடத்திய கருத்துக் கணிப்பில், அந் நாட்டின் பெரும்பான்மையான சமுதாயம் மிகக் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அதே போல அந்த நாட்டில் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளின் (anti-depressant drugs) விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஐரோப்பாவிலேயே மிகக் குறைவான தற்கொலைகள் நடக்கும் நாடாக சில ஆண்டுகளுக்கு முன் கிரீஸ் இருந்தது. ஆனால், அந் நாட்டின் மிகத் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் இப்போது நாடே திவாலாகிக் கிடக்கிறது.
ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன, வங்கிகள் முடங்கிவிட்டன. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். வீட்டு வாடகை கட்ட முடியாத பல குடும்பங்கள் அரசின் சமூகக் குடியிருப்புகளில் குடியேறி வருகின்றனர்.
குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைக் கூட செலுத்த முடியாத நிலைக்கு பல குடு்ம்பங்கள் தள்ளப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தை சீராக்கவும் அரசின் செலவுகளைக் குறைக்கவும் உதவித் திட்டங்களில் பெரும்பாலானவற்றை கிரீஸ் நாடு நிறுத்திவிட்டது. மேலும் அரசு ஊழியர்களின் ஊதியமும் குறைக்கப்பட்டுவிட்டது. ஓய்வு ஊதியங்களும் பாதிக்கும் மேல் குறைக்கப்பட்டுவிட்டன. அரசுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய 40,000 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டனர்.
இந் நிலையில் தான் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. அதிலும் ஏழைகள், நடுத்தர மக்கள் மற்றும் முதியோர் தான் அதிகளவில் தற்கொலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
பொது இடத்தில் துப்பாக்கியால் சுட்டும், தூக்கில் தொங்கியும் தற்கொலை செய்து வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளில் தற்கொலைகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துவிட்டது. இது மிக அபாயகரமான சூழலாகும்.
மேலும் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளின் விற்பனையும் 25 சதவீதம் அதிகரித்துள்ளது.