இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக வங்கி ஊழியர் சங்க சம்மேளனத்தின் (United Forum of Bank Unions- UFBU) தமிழக கிளையின் தலைவர் டி.தமிழரசு, பொதுச் செயலர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் வங்கி ஊழியர்-பொது மக்களுக்கு எதிரான திருத்தங்களைச் செய்யும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இதை கண்டித்தும் மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் ஸ்டேட் வங்கியின் லட்சக்கணக்கான ஊழியர்களும் அடங்குவர்.
வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளமாட்டோம்:
இந் நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 7 தொழிற்சங்கங்கள் அடங்கிய தேசிய வங்கி ஊழியர்கள் சங்கம் (என்.யு.பி.இ.) கலந்து கொள்ளாது என்று அதன் பொதுச்செயலாளர் எல்.பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பினும், தங்கள் அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள வங்கிகள் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் வழக்கம் போல் பணியாற்றுவார்கள் என்றும், வேலைநிறுத்த போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கோரிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேச விரும்புவதாகவும், அதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.