புதுக்கோட்டை: கடலின் பருவ நிலை மற்றும் மீன்கள் அதிகம் உள்ள இடங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் எஸ்.எம்.எஸ். மூலம் மீனவர்கள் பெற்றுக் கொள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.
எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், தேசிய மீன்வள துறையுடன் இணைந்து நடத்திய மதிப்பு கூட்டப்பட்ட மீன் உணவு தயாரித்தல், டீசல் இயந்திரம் பழுது பார்த்தல் மற்றும் ஜி.பி.எஸ். பயிற்சி பெற்ற மீனவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மணமேல்குடி மற்றும் மீமிசலில் நடந்தது.
அப்போது, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் கூறுகையில்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு உதவும் வகையில் முதற்கட்டமாக இப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்துடன் இணைந்து 270 மீனவர்களுக்கு தினசரி காற்றின் வேகம், காற்று அடிக்கும் திசை, அலை உயரம் குறித்த முன்னெச்சரிக்கை தகவல், மீன்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்புள்ள இடங்கள் குறித்த தகவல்கள் மீனவர்களின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுகிறது.
குறுஞ்செய்திகளை பெற விருப்பமுள்ள மீனவர்கள் 93440 47580 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் மீனவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக 24 மணி நேரம் செயல்படும் மீனவ உதவி மையம் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மையத்தின் மூலம் தகவல் பெற 92824 42311 மற்றும் 92824 42312 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.


Click it and Unblock the Notifications