பெங்களூர்: பெங்களூரில் வாழும் ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருவதால், அவர்களைச் சார்ந்த வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது ஆகஸ்ட் 20ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் திடீரென பரவியது. செல்போன் எஸ்.எம்.எஸ், ஃபேஸ்புக், டிவிட்டரில் இந்த வதந்தி காட்டுத் தீயாகப் பரவியது. இதையடுத்து 5,000க்கும் மேற்பட்ட வடகிழக்கு மாநிலத்தவர்கள் பெங்களூரில் இருந்து ரயில் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிட்டனர். மேலும் பலர் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதனால் வட கிழக்கு மாநிலத்தவர்கள் அதிகம் வேலைபார்க்கும் ஹோட்டல், பப்கள், பியூட்டி பார்லர்கள், ஸ்பாக்கள், பாதுகாப்பு ஏஜென்சிகள் மற்றும் பிபிஓக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன.
இதில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் வேலைக்கு வரவில்லை.
ஆரஞ்சு டொமேட்டோ ரெஸ்ட்ரான்ட் செயினின் 200 ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்கள் அஸ்ஸாம், மணிபூர், மேகாலயா, திரிபுரா, அருணாச்சல பிரதேசம், மிசோரம் மற்றும் நாகாலாந்தைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் அந்த செயினின் டைரக்டர் ஷிபு தாமஸ் கூறுகையில், நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களின் பாதுகாப்பை பலப்படுதத திட்டமிட்டோம். ஆனால் பலனில்லை. ஏற்கனவே 15 ஊழியர்கள் கிளம்பிவிட்டனர். மேலும் பலர் கிளம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பும் முன்பு சம்பளத்தை கூட வாங்காமல் செல்கின்றனர் என்றார்.
ஐடி நிறுவனத்திற்கு ஆட்கள் எடுக்கும் ஐக்யா கன்சல்டன்ட்ஸ் தலைவர் அஜித் ஐசக் கூறுகையில், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர்கள் சிலர் நேற்று வேலைக்கு வரவில்லை. நிலைமை சரியாகும் வரை தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றனர். பெங்களூரில் உள்ள தங்கள் வீடுகளில் இருக்க அஞ்சுபவர்களுக்கு கம்பெனி கெஸ்ட் ஹவுஸைத் தருகிறோம் என்று கூறினோம் என்றார்.