டெல்லி: 31-3-2007 நிலவரப்படி இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிலும் தமிழகத்தில் தான் அதிகமான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை இணையமைச்சர் வயலார் ரவி லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது,
31-3-2007 நிலவரப்படி இந்தியாவில் உள்ள பதிவு செய்யப்பட்ட சுமார் 5 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவை மூடப்பட்டதால் எத்தனை பேர் வேலை இழந்தார்கள் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் 2006-2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறித்த 4வது அகில இந்திய கணக்கெடுப்புபடி 805.24 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
மூடப்பட்ட குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு அளிக்க அமைச்சகம் நேரடி நிதியுதவி செய்யவில்லை. கடன் மறுசீரமைப்பு, தொழில் நிறுவனங்களுக்கு மறுவாழ்வு கொடுக்க புதிய கடன் வழங்குவது போன்றவற்றை வர்த்தக வங்கிகள் உள்ளிட்டவை தான் செய்யும். 2011-2012ல் 2.82 லட்சம் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில் 2.37 லட்சம் நிறுவனங்கள் துவங்கப்பட்டன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அதிகமாக மூடப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தையடுத்து உத்தர பிரதேசம் (80,616) இரண்டாவது இடத்திலும், கர்நாடகா(47,581) 3வது இடத்திலும், மகாராஷ்ரா(41,856) 4வது இடத்திலும், மத்திய பிரதேசம்(36,502) மற்றும் குஜராத் (34,945) முறையே 5 மற்றும் 6வது இடத்திலும் உள்ளன.