தூத்துக்குடி: நல்ல தண்ணீர் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 2 யூனிட்கள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன. இதனால் மின் உற்பத்தி வெகுவாகக் குறைகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் வீதம் 5 யூனிட்களில் இருந்து மொத்தம் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். அடுத்தடுத்த தீ விபத்துகள் மற்றும் பழுதுகளுக்குப் பிறகும் 5 யூனிட்டுகள் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இங்குள்ள முதல் யூனி்ட்டில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த 21ம் தேதியில் இருந்து மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த பராமரிப்பு பணிகள் 30 முதல் 38 நாட்கள் வரை நடக்கும் என்று தெரிகிறது. இதனால் அடுத்த மாதம் இறுதி வரையில் அங்கு மின் உற்பத்தி இருக்காது. இதனால் இந்த யூனிட்டில் இருந்து கிடைக்கும் 7,200 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளது. இந்நிலையில் அனல் மி்ன் நிலையத்தில் தண்ணீர் தட்டுபாட்டால் மின் உற்பத்தியில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இரு யூனிட்களில் மின் உற்பத்திக்கான கொதிகலன்களை குளிர்விக்கும் இயந்திரங்களில் தேவைக்குரிய நல்ல தண்ணீர் கிடைப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு யூனிட்கள் அவ்வப்போது நிறுத்தப்படுகின்றன.
இந்நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மேலும் 2 யூனிட்கள் செயல் இழந்தால் தமிழகமே இருளில் மூழ்கிவிடும் அபாயம் உள்ளது.
இது குறித்து அனல் மின் நிலைய அதிகாரிகள் சிலர் கூறுகையில்,
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கொதிகலன்களை குளிர்விப்பதற்காக மஞ்சள் நீர் காயல் தாமிரபரணியில் இருந்து கொண்டுவரப்பட்டது. தற்போது அங்கிருந்து வரும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கொதிகலன்களை குளிர்விப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றனர்.