
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட 81 இந்திய வீரர்கள், வீராங்களில் 6 பேர் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் வீரர் விஜய்குமார், மல்யுத்த வீரர் சுசில்குமார் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர். துப்பாக்கி சுடும் வீரர் ககன்நரங், பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மல்யுத்த வீரர் யோகேஸ்வர் தத் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.
இவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல தனியார் நிறுவனங்களும் பரிசுத்தொகையை வழங்கி வருகிறது. இதில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பல இந்தியர்களும் கோடீஸ்வரர்களாகி உள்ளனர். ஆனால் பதக்கம் வென்றவர்களுக்கு கிடைக்கும் பரிசுத்தொகையில் 30 சதவீதத்தை வருமான வரியாக செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால் வருமான வரி சட்டம் 17(ஏ) பிரிவு 10ன் கீழ், பொது நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் விருதுகள் மற்றும் பரிசுத் தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும்.
மேற்கண்ட இந்த வருமான வரி சட்டத்தின் மூலம், மத்திய விளையாட்டு துறை வழங்கும் அனைத்து விருதுகள் மற்றும் பரிசுத் தொகைகளுக்கு வருமான வரி விலக்கு பெறப்பட்டுள்ளது. ஆனால் சில மாநில அரசுகள் இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.
இது குறித்து முன்னாள் பஞ்சாப் மாநில விளையாட்டுத் துறை இயக்குனர் பர்கத் சிங் கூறியதாவது,
பஞ்சாப் மாநில அரசு ஆண்டுதோறும் வழங்கும் மஹாராஜா ரஞ்சித் சிங் விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இந்த விருதிற்கு மட்டுமே வரி விலக்கு பெறப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில அரசு மூலம் வழங்கப்படும் மற்ற விருதுகள் மற்றும் பரிசுத்தொகை ஆகியவற்றிற்கு வரி விலக்கு பெறப்படவில்லை என்றார்.


Click it and Unblock the Notifications