மதுரை: மதுரை அருகே கீழவளவு பகுதியில் கிரானைட் குவாரிகளால் 700 ஏக்கர் பாசன நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், இது வரை முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள 175 குவாரிகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கற்களில், இது வரை 45,000 கற்கள் கணக்கிடப்பட்டு கன அடியில் அளவிடப்பட்டுள்ளன.
அதில் நல்ல கற்களுக்கு 1 கன அடிக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையும், கழிவு கற்களுக்கு ரூ.10,000 எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள கற்களை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. 15 நாட்களில் இந்தப் பணிகள் முடிவுறும்.
அதன் பின்னர் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்ப்பட்டு உள்ளது, பதுக்கி வைக்கப்பட்டு உள்ள கற்களின் சரியான மதிப்பு எவ்வளவு என்பது தெரிய வரும். இதற்கு முன் இதுவரை ஏற்பட்டுள்ள இழப்புத் தொகையை சரியாக கணக்கிடவே முடியாது.
மேலூர், கீழையூர், கீழவளவு பகுதிகளில் மட்டும் கிரானைட் குவாரிகளால் 700 ஏக்கர் பாசன நிலங்கள் அழிக்கப்பட்டு உள்ளதாக பொதுப் பணித்துறையினர் கணக்கிட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக குவாரிகள் வாங்கியுள்ள நிலம் தொடர்பான சில ஆவணங்கள் மாயமாகி உள்ளன. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
மத்திய மந்திரி மு.க.அழகிரின் மகன் மீதும் கிரானைட் கற்கள் முறைகேடு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா என்று கேட்டதற்கு, முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றார்.