இலங்கையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18 முதல் அக்டோபர் 7ம் தேதி வரை டுவென்டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 12 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன.
இந்த போட்டிகள் உலகமெங்கும் உள்ள 218 நகரங்களில் ஒளிப்பரப்ப, சர்வதேச கிரிக்கெட் வாரியம்(ஐசிசி) திட்டமிட்டுள்ளது. இதில் முதல் முறையாக தென் அமெரிக்காவிலும் கிரிக்கெட் தொடர் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஸ்டார் கிரிக்கெட் மற்றும் ஸ்டார் கிரிக்கெட் ஹெச்.டி ஆகிய சேனல்களில் லீக் போட்டிகள் முதல் இறுதிப்போட்டி வரையிலான அனைத்து போட்டிகளும் ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளது.
கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையே விளம்பரங்களை ஒளிப்பரப்புவதன், ஒளிப்பரப்பு நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில் டுவென்டி20 உலக கோப்பை தொடரின் போட்டிகளுக்கு இடையே விளம்பரங்களை ஒளிப்பரப்பி, சுமார் ரூ.240 கோடி வருமானம் ஈட்ட இ.எஸ்.பி.என் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், ஹவில்ஸ் இந்தியா, ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார்ஸ், பெப்சிகோ, நோக்கியா, டாடா டெலிசர்வீஸ், பெர்னோட் ரிகார்ட் ஆகிய நிறுவனங்களுடன், இ.எஸ்.பி.என் ஸ்டார் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதில் ரிலையன்ஸ் மற்றும் ஹவில்ஸ் நிறுவனங்கள் கிரிக்கெட் போட்டிகளை சேர்ந்து வழங்க உள்ளன. மற்ற விளம்பரத்தாரர் நிறுவனங்கள் இணைந்து வழங்க உள்ளன. ஆனால் மொத்தம் 10 நிறுவனங்களை விளம்பரத்தாரராக பெறுவதன் மூலம் டுவென்டி20 உலக கோப்பை தொடரில் விளம்பரங்களின் மூலம் சுமார் ரூ.240 கோடி வருமானத்தை ஈட்ட இ.எஸ்.பி.என் ஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.