
இந்திய வருமான வரித்துறையின் புதிய அடையாள சின்னம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. வருங்கால தலைமுறையினரை கவரும் வகையில், இந்த புதிய அடையாள சின்னம் அமைய வேண்டும். மேலும் வருங்காலத்தில் வருமான வரித்துறை செலுத்துவோரின் இடையே ஆர்வம் ஏற்படும் வகையில் இருக்க வேண்டும் என்று வருமான வரித்துறை எதிர்பார்க்கிறது.
எனவே இளம்தலைமுறையினரை கவரும் வகையிலான புதிய அடையாள சின்னத்தை உருவாக்கும் போட்டியை, வருமான வரித்துறை அறிவி்த்துள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான அடையாள சின்னத்தின் மாதிரியை வடிவமைத்து வரும் செப்டம்பர் 23ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். பொதுமக்களிடம் இருந்து வந்த மாதிரிகளை வைத்து தேர்வு குழு ஆலோசித்து சிறந்த அடையாள சின்னத்தை தேர்வு செய்யும். தேர்வு செய்யப்படும் மாதிரிக்கு ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள சின்னம் அமைக்கும் போது கீழ்கண்ட கருத்துகள் அதில் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அவை பின்வருமாறு:
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் வருமான வரி செலுத்துவது அவரது கடமையாகும். குடிமக்களிடம் இருந்து பெறப்படும் வருமான வரியின் மூலம் நாட்டின் கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு, வருங்கால சந்ததியருக்கு வாழ சிறந்த நாட்டை அமைக்க முடியும். வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு குடிமகனுக்கும், வருமான வரித்துறை சிறந்த நண்பனாக கருதப்படுகிறான். அதே நேரத்தில் செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றும் குடிமகன்களிடம், வருமான வரித்துறை கடுமையாக நடந்து கொள்ளும்.
வருமான வரித்துறையின் புதிய அடையாள சின்னத்தை உருவாக்குதல், அதை அனுப்புதல் குறித்த கூடுதல் விவரங்களை www.incometaxindia.gov.in. என்ற இணையதளத்தில் பெறலாம்.


Click it and Unblock the Notifications