டெல்லி: சஹாரா குரூப் நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இருந்து முறைகேடாக வசூலித்த ரூ.27,000 கோடியை மூன்று மாதங்களுக்குள் 15 சதவீத வட்டியுடன் திருப்பித்தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சஹாரா குழுமத்தை சேர்ந்த சஹாரா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய 2 நிறுவனங்களும் முதலீட்டாளர்களுக்கு முழுவதும் பங்குகளாக மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வழங்கி பல ஆயிரம் கோடிகளை திரட்டின. ஆனால் முறையான ஆவணங்கள் இல்லை. முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் வசூலித்ததற்கு முறையான ஆவணங்கள் இல்லாததால் நிறுவனத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இது பங்குச்சந்தை விதிமுறைகளை மீறிய செயல் எனவும் வசூலித்த பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தர வேண்டும் எனவும் செபி உத்தரவிட்டது. இதை எதிர்த்து கடன் பத்திரங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் சஹாரா குழுமம் மேல்முறையீடு செய்தது.
இந்த மனுவை தள்ளுபடி செய்த தீர்ப்பாயம், முதலீட்டாளர்களுக்கு பணத்தை வழங்கும்படி உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழுமம் மேல்முறையீடு செய்தது. அந்த நிறுவனம் தனது மேல்முறையீட்டு மனுவில், முதலீட்டாளர்களின் பங்குகளை பாதுகாக்கும் அளவுக்கு தங்களிடம் சொத்துக்கள் இருப்பதாகவும் இதனால் முதலீட்டாளர்களுக்கு பாதகம் ஏற்படாது எனவும் தெரிவித்திருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களைக் கொடுத்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தது.
இதுதொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜே.எஸ்.கெஹர் அடங்கிய பெஞ்ச் முன்பு நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று அளித்த தீர்ப்பில், சஹாரா குழும நிறுவனங்கள் தங்கள் முதலீட்டாளர்களுக்கு ரூ.24,000 கோடியை 15 சதவீத வட்டியுடன் 3 மாதத்துக்குள் திருப்பித்தரவேண்டும். இந்த காலக்கெடுவுக்குள் முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பித்தராவிட்டால், சஹாரா குழும வங்கி கணக்குகளை முடக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது..
மேலும் செபியிடம் சஹாரா குழுமம் தனது ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். செபி நடத்தும் விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.என்.அகர்வாலை நியமிக்கிறோம். செபி தனது விசாரணை அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது