மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் 90 சுரங்கங்களில் 58 சுரங்கங்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து அமைச்சர்கள் குழு இன்று முடிவு செய்யப்படும் என்று அறிவிக்கபப்ட்டிருந்தது. இந்த 58 சுரங்கங்களுக்கும் ஏன் ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கூடாது என்று ஏற்கெனவே நோட்டீசும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதில் 33 அரசு நிறுவனங்களும் 25 தனியார் நிறுவனங்களும் அடங்கும்.
இவைபோக மேலும் 32 சுரங்கங்களின் ஒதுக்கீடுகள் குறித்தும் அமைச்சர்கள் குழு ஆராய இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சர்கள் குழு ஆலோசனைக் கூட்டத்தில் இந்த 32 நிறுவனங்களின் ஒதுக்கீடு பற்றி ஆலோசிக்கப்பட்டது.
நிலக்கரி சுரங்கங்களுக்கான அனைத்து ஒதுக்கீடுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்திய அரசோ அப்படியெல்லாம் உடனே நாங்கள் உடனே ரத்து செய்ய முடியாது. மத்திய அமைச்சர்கள் குழுதான் இறுதி முடிவு எடுக்கும் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கால அவகாசம் கோரும் சிபிஐ
இதனிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய ஊழல் கண்காணிப்பகத்திடம் கால அவகாசத்தைக் கோரியிருக்கிறது சிபிஐ.
மத்திய ஊழல் கண்காணிப்பகத்திடமிருந்து பெறப்பட்ட உத்தரவின் அடிப்படையில் முதல்கட்ட விசாரணையை சிபிஐ தொடங்கியது. 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 31-ந் தேதியுடன் 3 மாத கால அவகாசம் முடிவடைந்துவிட்டது. இதனால் ஊழல் கண்காணிப்பகத்திடம் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளது சிபிஐ.
மேலும் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு குறிப்பிட்ட சில நிறுவனங்களின் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு சுரங்க நிறுவனத்திலும் சோதனைகளை மேற்கொள்ள வில்லை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐயின் தற்போதைய விசாரணை வளையத்தில் குறைந்தபட்சம் 10 நிறுவனங்களாவது சிக்கியிருக்கின்றன என்று கூறப்படுகிறது.