அகமதாபாத்: கடந்த 2 மாத காலமாக மந்தமாக இருந்த சூரத் வைர வியாபாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.
குஜராத்தில் உள்ள சூரத் ஜவுளி வியாபாரம் தவிர்த்து வைர வியாபாரத்திற்கும் பெயர் போனது. கடந்த 2 மாதமாக வைர வியாபாரம் மந்தமாக இருந்தது. இந்நிலையில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சீனா மற்றும் ஐரோப்பாவில் இருந்து வைரத்திற்கு அதிக அளவில் ஆர்டர் வந்துள்ளதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த மாதம் முழுவதும் வியாபாரம் மிகவும் நன்றாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வைர வியாபாரத்தில் மேம்பாடு ஏற்பட்டுள்ளபோதிலும், நடப்பு நிதியாண்டில் வைர ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் குறைவாக இருக்கும் என்று ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அந்த கவுன்சிலின் தலைவர் ராஜீவ் ஜெயின் கூறுகையில்,
இறக்குமதி செய்யப்படும் வெட்டு வைரம் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரம் மீது 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டதால் நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் வியாபாரம் சரியில்லை. இதனால் வைர ஏற்றுமதி 30 சதவீதம் குறைந்தது என்றார்.
நடப்பு நிதியாண்டின் முதல் காலிறுதியில் வெட்டு வைரம் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைர ஏற்றுமதி 25 சதவீதம் அதாவது ரூ.21,902 கோடி அளவுக்கு குறைந்தது.
2012ம் நிதியாண்டில் இந்தியா 42.84 பில்லியன் டாலர் அளவுக்கு ரத்தினங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்துள்ளது. அதில் 38 சதவீதம் தங்க நகைகள் மற்றும் வண்ண கற்கள், 4 சதவீதம் வைரம் அடக்கம்.