சென்னை: சென்னையில் இயங்கி வந்த மருந்து நிறுவனத்தின் வணிக வரி கணக்கை, செங்கோட்டைக்கு இடமாற்றம் செய்ய அனுமதி சான்றிதழ் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்ட வணிக வரித்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஆரஞ்சு ஹெல்த் கேர்' என்ற பெயரில் மருந்து நிறுவனத்தை நடத்தி வந்தவர் வைத்தியநாதன்(51). இந்த நிறுவனத்தை தற்போது அவரது சொந்த ஊரான செங்கோட்டைக்கு மாற்றிவிட்டார்.
ஆனால் அவரது மருந்து நிறுவனத்தின் வணிக வரி கணக்கு, சென்னை மைலாப்பூர் வணிக வரித்துறை உதவி கமிஷனர் அலுவலகத்தில் இருந்தது. இதை தனது சொந்த ஊருக்கு மாற்ற வைத்தியநாதன் விரும்பினார்.
இதற்காக கடந்த 31ம் தேதி மைலாப்பூர் வணிக வரித்துறை அலுவலக உதவி கமிஷனர் கே.விஜயராகவனிடம் விண்ணப்பம் அளித்தார். அப்போது விஜயராகவன், வணிக வரிக்கணக்கை மாற்ற ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் அவ்வளவு பணம் தர முடியாது என்று கூறிய வைத்தியநாதன், பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பெற்று கொள்ள விஜயராகவன் சம்மதித்தார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வைத்தியநாதன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில், நேற்று மாலை மைலாப்பூர் வணிக வரித்துறை அலுவலகத்திற்கு வந்த வைத்தியநாதன் ரூ.15 ஆயிரம் லஞ்ச பணத்தை விஜயராகவனிடம் கொடுத்தார்.
அதை விஜயராகவன் பெற்று கொண்ட போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், விஜயராகவனை கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயராகவனிடம் விசாரித்து வருகின்றனர்.