நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வருங்கால வைப்பு நிதியாக செலுத்தப்பட்ட ரூ.119 கோடி கேட்பாரின்றி முடங்கிக் கிடக்கின்றது. எனவே உரிமை கோராத தொகைக்கு 3 ஆண்டுக்கு பிறகு வட்டி கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நெல்லை வருங்கால வைப்பு நிதி துணை மண்டல ஆணையர் ஸ்வரப்சாமி நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நெலலை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் பேருக்கு நெல்லை துணை மண்டல அலுவலகம் மூலம் பி.எப். தொகை செலுத்தப்பட்டு வருகிறது. 4,552 நிறுவனங்கள் பி.எப். தொகை செலுத்தி வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளின் பட்டியல்
மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதில பி.எப். தொகை செலுத்தாத பள்ளிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஊழியர்களுக்கு பி.எப். தொகை செலுத்தாத 10 நிறுவனங்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 628 பி.எப். கணக்குகள் முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த கணக்குகளுக்கு யாரும் இதுவரை உரிமை கோரவில்லை. இந்த கணக்குகளில் செலுத்தப்பட்டு உரிமை கோரப்படாத தொகை மட்டும் ரூ.119 கோடியாகும்.
ஒரு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வேறு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் அந்த பி.எப். தொகையை உரிமை கோராமல் விட்டு விடுகி்ன்றனர். அவ்வாறு கேட்கப்படாத தொகைகளுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு வட்டி கிடையாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மண்டல பி.எப். அலுவலகம் மூலம் மட்டும் 80 பேருக்கு மாதாந்திர பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி விட்டு வேலையை விட்டவருக்கு பென்ஷன் வழங்கப்படும். பென்ஷன் பெற ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 30ம் தேதிக்குள் உயிர்வாழ் சான்றிதழ், மறுமணச் சான்றிதழை அளிக்க வேண்டும். ஆனால் பலர் ஜனவரி, பிப்ரவரி மாதம் வரை கூட சான்றிதழ்கள் அளிப்பதில்லை. அவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தானாகவே பென்ஷன் நிறுத்தப்பட்டுவிடும் என்று தெரிவித்தார்.