தமிழகஅரசின் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு, ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் டாஸ்மாக் வருமானம் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நிலையில், மது பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், இன்று முதல் மது வகைகள் பாட்டிலுக்கு ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ரம், பிராந்தி, விஸ்கி போன்ற மது வகைகள் (சாதாரண ரகம்), குவார்ட்டர் பாட்டில் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று முதல் ரூ.5 விலை உயர்ந்து, ரூ.70-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல், ரம், பிராந்தி, விஸ்கி போன்றவற்றின் நடுத்தர ரகம் ரூ.75-ல் இருந்து ரூ.80 ஆகவும் விலை அதிகரிக்கப்படுகிறது. பிரீமியம் ரக வகைகளும் இதேபோல், ரூ.5 விலை உயர்த்தப்படுகிறது.
இதேபோல், அரை மற்றும் முழு பாட்டில் மது விலைகள் ரூ.45 வரை உயர்த்தப்படுகிறது. சாதாரண ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.125, ரூ.130 மற்றும் ரூ.135 ஆக உள்ளது. இனி இந்த வகைகள் அனைத்தும் ரூ.140 ஆக உயர்த்தப்படுகிறது. இதில் நடுத்தர ரகங்கள் தற்போது ரூ.145, ரூ.155 ஆக உள்ளது. இந்த வகைகள் அனைத்தும் இனி ரூ.165 ஆக உயரும். பிரீமியம் ரக அரை பாட்டில் விலை தற்போது ரூ.155, ரூ.160 ஆக உள்ளது.
இவற்றின் விலை இனி ரூ.180 ஆக உயரும்.
முழு பாட்டில் சாதாரண ரகத்தின் விலை தற்போது ரூ.235, ரூ.245, ரூ.255 ஆக உள்ளது. இனி இந்த ரகங்கள் அனைத்தும் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டு ரூ.280க்கு விற்கப்படும். முழு பாட்டில் நடுத்தர ரகங்களின் விலை தற்போது ரூ.280, ரூ.295க்கு ஆக உள்ளது. இனி ரூ.320 ஆக இவற்றின் விலை உயர்த்தப்படும்.
பிரீமியம் ரக முழு பாட்டில் விலை தற்போது ரூ.315, ரு.320, ரூ.360 ஆக இருந்தது,. இனி இவற்றின் விலை ரூ.360 ஆக உயர்த்தப்படும். ஆனால், பீர் வகைகள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த விலை உயர்வு குடிப் பிரியர்களை கடும் கொதிப்பில் ஆழ்த்தி விட்டது. காலங்கார்த்தாலேயே இன்று கடைக்கு வந்த குடிகாரர்கள், மது விலையைக் கேட்டு டென்ஷனாகி விட்டார்கள்.
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு காலை 10 மணிக்கே வந்து விட்ட ஒரு 'குடிகார குடிமகன்' கோபத்துடன் கூறுகையில், நான் ஆரம்பத்தில் கள் குடித்தேன். பிறகு சாராயம் குடித்தேன். இப்போது பாரீன் சரக்குக்கு மாறியுள்ளேன். நான் நிறைய மது குடிப்பேன். மது குடிக்காவிட்டால் என்னால் இருக்க முடியாது.
என்னுடைய ஒரு நாள் பட்ஜெட் ஒரு குவார்ட்டர் பாட்டில்தான். மது குடித்தால்தான் என்னால் வேலை செய்ய முடியும், உடல் அசதி சரியாகும். ஆனால் இப்போது கட்டிங்கை 40 ரூபாயாக உயர்த்தி விட்டனர். குவார்ட்டர் விலையும் கூடி விட்டது. அதை விட மோசமாக, அரசு கூறிய விலையை விட கூடுதல் விலை வைத்து இங்கே விற்கிறார்கள். இது என்ன நியாயம்.
எங்களால்தானே அரசுக்கு ஆயிரக்கணக்கில் வருமானம் வருகிறது. அப்படிப்பட்ட எங்களது நலனுக்காக குவார்ட்டர் பாட்டிலை 50 ரூபாய்க்குக் கொடுக்க வேண்டியதுதானே. அதில் என்ன குறைந்து போய் விடும். நாங்கள் குடித்து விட்டு, கடையில் போட்டுப் போகும் பாட்டில், மூடியையையெல்லாம் கூட காசு பார்த்து விடுகிறார்கள். எனவே இந்த விலை உயர்வைக் கண்டிக்கிறேன். விலையைக் குறைக்கக் கோருகிறேன் என்றார் படு தெளிவாக.
கட்டிங் விலையை எப்படி ஏற்றலாம்?
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான 'குடிகாரர்கள்' கட்டிங்கைத்தான் அதிகம் நாடுகிறார்கள். செலவும் குறைவு, அதேசமயம், ஓரளவு போதையையும் அடைந்து விடலாம் என்பதால் கட்டிங்கோடு நிற்கும் குடிகமக்கள்தான் அதிகம். ஆனால் கட்டிங் விலையையும் ஏற்றியதுதான் அவர்களை கடும் கொதிப்பில் ஆழ்த்தியுள்ளதாம்.
இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களுக்கும், குடிமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.