தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள பஸ்கள் புதுப்பொலிவுடன் இருக்க முதல்வர் ஜெயலிலதா உத்தரவிட்டார். இதையடு்தது புதிதாக 3,000 பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 864 புதிய பஸ்கள் கடந்த ஜூன் மாதம் இயக்கப்பட்டன. தற்போது அடுத்தகட்டமாக 1,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டன. அவை அனைத்து தலைமை செயலகத்திற்கு முன்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டன. அவற்றை முதல்வர் ஜெயலலிதா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பஸ் தொழிலாளர்கள் 1,874 பேருக்கு ஓய்வூதியம் வழங்குவதற்காக ரூ.ரூ.35 கோடியே 88 லட்சத்தை அளிக்க முதல்வர் உத்தரவிட்டார். மேலும் அதில் 2 தொழிலாளர்களுக்கு அவர்களின் ஓய்வூதியத் தொகையை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.
இந்த புதிய பஸ்கள் 379 வழித்தடங்களில் இன்று முதல் இயக்கப்படும். தற்போது விடப்பட்டுள்ள பஸ்களில் மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 45ம், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 181 பஸ்களும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர விழுப்புரத்திற்கு 195ம், சேலத்திற்கு 115ம், கோவைக்கு 173ம், கும்பகோணத்திற்கு 149ம், மதுரைக்கு 39ம், நெல்லைக்கு 95 பேருந்துகளும் வழங்கப்பட்டுள்ளன.
அரசு போக்குவரத்து கழக பஸ்களின் எண்ணிக்கை 20,000க உயர்த்தப்படும் என்று முதல்வர் கடந்த மே மாதம் 8ம் தேதி சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது அரசு போக்குவரத்து கழக பேருந்துகளின் எண்ணிக்கை 20,207க உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் கீழ் வரும் வழித்தடங்கள் உள்பட 45 புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டுள்ளன,
144 இ - புதிய எருமை வெட்டிபாளையம்-கோயம்பேடு மார்க்கெட் (வழி: காரனோடை)
248 பி - வள்ளலார் நகர்-புத்தகரம் (வழி:அம்பத்தூர், கள்ளிக்குப்பம்)
142 பி - பெரம்பூர்-புத்தகரம் (வழி: ரெட்டேரி)
எம்.88 (கட்சர்வீஸ்): அய்யப்பன்தாங்கல்-குன்றத்தூர் (வழி:போரூர், மதனந்தபுரம், மவுலிவாக்கம்)
66 கே: பூந்தமல்லி-கீழ்க்கட்டளை (வழி:குமணன்சாவடி)
ஏ19:- மத்திய கைலாஷ்-சோளிங்கநல்லூர் (வழி:பெருங்குடி)
170 ஏ (கட்சர்வீஸ்): மூலக்கடை-கோயம்பேடு பஸ் நிலையம் (மாதவரம் பைபாஸ்)
இந்த நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்த முதல்வர் மாணவ-மாணவிகளுக்கு தனது கையால் சைக்கிள்களை வழங்கினார். மேலும் 108 அவசர கால ஆம்புலன்ஸ், அமரர் ஊர்திகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு புதிய வாகனங்களையும் அவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் விஜய், முகமது ஜான் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.