சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்து காரணமாக தீபாவளி பட்டாசு விற்பனைக்கு கடும் நிபந்தனைகளை அமல் படுத்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் முடிவு செய்துள்ளனர். இதன் எதிரொலியாக இனி சூப்பர் மார்க்கெட்டிலும், திருமண மண்டபங்களிலும் பட்டாசு விற்பனை செய்ய முடியாது. பிளாட்பார, தெருவோர கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, பலகாரங்களுக்கு அடுத்த படியாக அதிகம் விற்பனையாவது பட்டாசுதான். இந்த ஆண்டு நவம்பர் 13 ம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் இப்பொழுதே சிவகாசியில் இருந்து பல கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு வாங்கப்பட்ட பட்டாசுகள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கடந்த வாரம் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தினை அடுத்து இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்க போலீசாரும், தீயணைப்புத்துறையும் முடிவு செய்துள்ளனர்.
பட்டாசு கடைகளுக்கு கடும் பாதுகாப்பு நிபந்தனைகளை விதிப்பது தொடர்பாக, சென்னை நகர போலீஸ் கமிஷனர் திரிபாதியுடன், தமிழ்நாடு தீயணைப்புத்துறை துணை இயக்குனர் விஜயசேகர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பட்டாசு கடைகளுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பாக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் விஜயசேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
தெருவோர கடைகளுக்கு அனுமதி கிடையாது
விபத்து இல்லாத தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன், வழக்கமாக உள்ள கட்டுப்பாடுகளை சற்று கடுமையாக அமல்படுத்த உள்ளோம். பட்டாசு கடைகள் நிரந்தர கான்கிரீட் கட்டிடங்களில்தான் போட வேண்டும். ஒரு கடைக்கும் மற்றொரு கடைக்கும் இடையில் குறைந்தது 50 மீட்டர் தூரம் இருக்க வேண்டும். கீற்று கொட்டகை கடைகளுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. கடையில் 2 வாசல்கள் இருக்க வேண்டும். கடைகள் 15 அடி அகலம் உள்ளதாக இருக்க வேண்டும்.
கல்யாண மண்டபங்கள்
இந்த ஆண்டு எக்காரணத்தைக் கொண்டும் பிளாட்பார, தெருவோர பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. அதுபோல சூப்பர் மார்க்கெட்டிலும், திருமண மண்டபங்களிலும் பட்டாசு விற்க அனுமதிக்கப்பட மாட்டாது. பட்டாசு கடைகளில் மின்சார இணைப்பு தேவையான பாதுகாப்பு வசதியோடு இருக்க வேண்டும்.
தற்காலிகமாக தீபாவளி பண்டிகைக்காக போடப்படும் பட்டாசுகடைகள் பலத்த பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளப்படும். கடைகள் போடப்படும் சாலைகள் அல்லது தெரு தீயணைப்பு வாகனங்கள் எளிதில் சென்று வரும் வகையில் இருக்க வேண்டும். குறுகிய தெரு அல்லது சந்தில் பட்டாசுகடை போட அனுமதி கிடையாது.
விழிப்புணர்வு பிரசாரம்
இதுபோல பட்டாசு வெடிப்பதற்கும் பொதுமக்களுக்கு வழக்கத்தைவிட கடும் நிபந்தனைகளும், கண்காணிப்பும் இருக்கும். விபத்தில்லாத தீபாவளியை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டும் சினிமா நடிகர் - நடிகையர்களை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள தீயணைப்புத்து முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு நடிகர் விக்ரம் மூலம் விழிப்புணர்வு பிரசார படங்கள் எடுக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது அதேபோல் இந்த ஆண்டும் விழிப்புணர்வு பிரசாரம் தீவிரமாக இருக்கும் என்றும், தீயணைப்புத்துறை துணை இயக்குனர் விஜயசேகர் தெரிவித்தார்.
வழக்கமாக தீபாவளி பட்டாசு வியாபாரத்துக்கு மழைதான் வில்லனாக வரும். ஆனால் இந்த ஆண்டு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.