இது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல இயக்குநர் என்.எஸ்.விஸ்வ நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் வாகபாரில் பாப்புலர் டவர் அலுவலகத்தில் பத்தனம்திட்டா பாப்புலர் பைனான்ஸ், பாப்புலர் டிரேடர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிறுவனம் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களில் கிளைகளை அமைத்து அதன் மூலம் பொது மக்களிடம் இருந்து வைப்பு நிதிகளை பெற்று வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 1934ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டப்படி பதிவு செய்யப்படாத எந்த ஒரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து வைப்புகளை பெறுவதும், ஏற்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்கூறிய நிறுவனங்களில் வைப்பு நிதி செலுத்துவோர் அதன் விளைவுகளுக்கு அவர்களே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.