விருதுநகர்: விருதுநகரில் உள்ள இதயம் நல்லெண்ணெய் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை. எனவே உயிர்சேதம் எதுவும் தவிர்க்கப்பட்டது. ஆனால் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
விருதுநகர் மாவட்டம், வில்லிபத்திரி பகுதியில் இதயம் நல்லெண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள குடோனில் எள் மூட்டைகள், எண்ணை டின்கள் மற்றும் அட்டை பெட்டிகள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. காற்று காரணமாக தீ வேகமாக குடோன் முழுவதும் பரவியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிற்சாலை பாதுகாப்பு பணியாளர்கள், இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து தொழிற்சாலைக்கு விரைந்து வந்த 6 தீயணைப்பு வண்டிகளை சேர்ந்த வீரர்கள், 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதிகாலை நேரம் என்பதால், தொழிற்சாலையில் பணியாளர்கள் யாரும் இருக்கவில்லை. இதனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
ஆனால் குடோனில் இருந்த எள் மூட்டைகள், எண்ணை டின்கள் ஆகியவை எரிந்து, சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. மின் கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.