சென்னை: இலங்கையுடன் தொழில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்த இலங்கை செல்லும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 45 பேர் அடங்கிய குழு இலங்கை செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை தமிழீழத் தாயகத்தில் கொன்று குவித்த இலங்கை நாட்டுடன் தொழில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்காக வரும் 20-ந் தேதியன்று மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் இலங்கை செல்வதாக வெளியாகி உள்ள செய்தி கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகள், இயக்கங்கள், பொதுமக்களின் வேண்டுகோள். இதை ஏற்று தமிழக அரசும் தமிழக சட்டப்பேரவையில், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் இந்திய மத்திய அரசோ எப்பொழுதும் போல் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி இலங்கையுடன் தொழில் வர்த்தக உறவுகளை விரிவாக்கம் செய்து வருவது தமிழர் நெஞ்சங்களில் எரிமலையால் வெடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக தொழில் வர்த்த சங்கத்தின் 45 பேர் கொண்ட குழு, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இலங்கை செல்வதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தமிழக மக்களின், தமிழக அரசின் உணர்வுகளை உதாசீனப்படுத்திவிட்டு தமிழக தொழில் வர்த்த்தக சங்கத்தினர் இலங்கை செல்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த பயணமானது தமிழக சட்டப்பேரவைத் தீர்மானத்தை அவமதிக்கும் செயல் என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சுட்டிக் காட்டுகிறது.
தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் இந்த இலங்கை பயணத்துக்கு தமிழக அரசு உடனே தடை விதித்து எச்சரிக்கை விடுக்குமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. தமிழர்களின் உணர்வுகளைப் புறந்த்தள்ளிவிட்டு இலங்கை செல்வார்களேயானால் தமிழக தொழில் வர்த்தக சங்கத்தினர் கடுமையான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications