சென்னை: சிறப்பாக சமூக சேவை செய்யும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
மகளிர் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் அனைவரும் கல்வி அறிவு பெற்றிருத்தல் வேண்டும் என்பது தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம் ஆகும். எனவே, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் அனைத்து (100 விழுக்காடு) சுய உதவிக் குழு உறுப்பினர்களையும் கல்வி அறிவு உள்ளவர்களாக உருவாக்கும் 30 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கும், அவர்களது கூட்டு முயற்சியினை அங்கீகரித்து விருதும், தலா 50,000 ரூபாய் வீதம் ரொக்கப் பரிசும் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மக்கள் நல்வாழ்வு, விவசாயம், சமூக நலம் ஆகிய துறைகள் குறித்து மகளிரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், அரசு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்தல், சிசுக்கொலை, வரதட்சணை, குழந்தைத் திருமணம், கள்ளச் சாராயம், பெண்கல்வி மறுப்பு ஆகிய சமூக அநீதிகளுக்கு எதிராக போராடுதல் என பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, இவர்கள் ஆற்றிவரும் சமூக நீதிப் பணிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மிகச் சிறந்த சமூக சேவையாற்றும் 5 சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் சமுதாயப் பணிகளை ஊக்கப்படுத்தி, ஒரு சமத்துவ சமுதாயம் உருவாக வழி வகுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications