சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,209 ஆசிரியர்களை பணியில் அமர்த்துவது குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் சவுத்ரி தெரிவித்தார்.
இது குறி்த்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ரூ.50 செலுத்தி விண்ணப்பங்களை பெற வேண்டும். விண்ணப்பிக்க வரும் 28ம் தேதி கடைசி நாளாகும்.
தேர்வு கட்டணம் எஸ்.சி.,எஸ்.டி.பிரிவனருக்கு ரூ.250ம், இதர பிரிவினருக்கு ரூ.500ம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெறாத விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் ஹால் டிக்கெட் அனுப்பப்படும். புதிய விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைன் மூலம் ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற 2,448 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இதற்கு 37 பேர் வரவில்லை. மீதமுள்ள 2,411 பேரில் 202 பேர்ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பட்டதாரி பயிற்சிகளை முடிக்கவில்லை என்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் 2 பட்டங்களை பெற்றுள்ளனர். இதனால் அவர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பள்ளி கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில் பள்ளி கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வி இயக்குனர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அடுத்த வாரம் கூடுகிறது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2,209 ஆசிரியர்களை பணியில் நியமிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications