சென்னை: அமெரிக்கா செல்ல விசா வழங்குவதில் புதிய நடைமுறையை அமெரிக்க அரசு வரும் 26ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.
இது குறித்து சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் பொது விவகாரத்துறை அதிகாரி டேவிட் ஜே.கேய்னர் கூறுகையில்,
அமெரிக்காவுக்கு சென்று மேற்படிப்பு படிக்கவும், வேலை பார்க்கவும், சுற்றுலா செல்லவும் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வழங்குவதில் புதிய நடைமுறை இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
விசாவுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டணம், ஆவணங்கள் சமர்பிப்பு, நேர்காணல் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்காக அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே, சென்னை நகரின் மையப் பகுதியில், துணை தூதரகத்தின் அங்கீகாரத்துடன், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு உதவி மையம் (பெசிலிட்டேஷன் சென்டர்) அமைக்கப்பட உள்ளது.
இங்கே விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டு அவர்களது விரல் ரேகை பதிவு செய்யப்படும். மனுதாரரின் புகைப்படங்களை பெற்றுக் கொண்டு அங்கேயே அவர்களது ஆவணங்களும் சரிபார்க்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் ஒரே நாளில் முடிக்கப்படும். மறுநாள் அமெரிக்க துணை தூதரகத்தில் நேர்காணல் நடத்துவார்கள். இதையடுத்து 5 வேலை நாட்களுக்கு பிறகு விசா வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள், தங்களது விசா குறித்த அனைத்து தகவல்களையும் இதே இணையதளத்தில் விண்ணப்ப படிவ எண் மூலம் தெரிந்து கொள்ளலாம். விசாவை துணை தூதரகத்திற்கு நேரில் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
புதிய முறைப்படி விசா தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற புதிய கால்சென்டர் அமைக்கப்பட உள்ளது. இந்த மையம், திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரையிலும், ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 9 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்படும்.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் தகவல்களைக் கேட்டுப் பெற முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 6 மொழிகளில் தகவல் பெறும் வசதி செய்யப்பட்டுள்ளது. கட்டணமில்லா தொலைபேசியில் இந்த மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க துணை தூதரகங்களில் சென்னையில் உள்ள துணை தூதரகத்தில் தான் அதிக எண்ணிக்கையில் விசா வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் 7 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டன என்றார்.


Click it and Unblock the Notifications