டெல்லி: நாடு முழுவதும் 4 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 794 தொண்டு நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில், மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் பணம் தொடர்பான ஆடிட்டிங் அறிக்கைகளை மத்திய அரசுக்கு அளிக்கவில்லை. அதேபோல எந்த செயலுக்காகபணம் பெறப்பட்டது, எப்படி செலவிடப்பட்டது என்றும் தெரிவிக்கவில்லை.
சில தொண்டு நிறுவனத்தினர் சமூக சேவை என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை ஒரே நாளில் அதிகளவில் வங்கிகளில் இருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து புலனாய்வு துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுபோல் எடுக்கப்படும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க, விதிமுறைகளை மீறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அட்வைசரி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர் நாடு முழுவதும் இயங்கும் தொண்டு நிறுவன செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் நாடு முழுவதும் 4 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 794 தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பணத்தை பெற்றுக் கொள்ளக்கூடாது. ஆந்திராவில் 670, கேரளாவில் 450 தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு பணத்தை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications