கொல்கத்தா: சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு பணம் மரத்தில் காய்க்கலை என்று பேசிவரும் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் ஒரிஜினல் முகத்தை ஃபேஸ்புக்கில் அம்பலப்படுத்தியிருக்கிறார் மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி.
மமதாவின் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மகாராஷ்டிரா வர்த்தகர்கள் சங்கக் கூட்டமைப்பினர் கடந்த 2004-ம் ஆண்டு பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் 2002-ம் ஆண்டு சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிப்பதை எதிர்க்கும் மன்மோகன்சிங்கின் பழைய கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டிருக்கிறது.
அதாவது 2002-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மன்மோகசிங்கிடம் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி அரசு ஏதேனும் பரிந்துரை செய்ய இருக்கிறதா? என்று மகாராஷ்டிரா வர்த்தகர்கள் சங்க கூட்டமைப்பு கடிதம் மூலம் கேட்டிருக்கிறது. அந்தக் கடிதத்துக்குப் பதிலளித்திருக்கும் மன்மோகன்சிங், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப் போகிறதா? மத்திய அரசு என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதி அமைச்சர், சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுக்கும் முடிவு ஏதும் அரசிடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார் என்று மன்மோகன்சிங் கூறியுள்ளார். இந்தக் கடிதத்தை அப்படியே பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடுகிறேன் என்று கூறி மமதா ஸ்கேன் செய்து ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டிருக்கிறார்.
மன்மோகன்சிங்கின் இந்த கடிதம் 2002-ம் ஆண்டு டிசம்பர் 22-ந் தேதி எழுதப்பட்டிருக்கிறது. இதேபோல் மன்மோகன்சிங்கு மகாராஷ்டிரா வர்த்தகர்கள் சங்கக் கூட்டமைப்பு எழுதிய பழைய கடிதங்களையும் வாங்கி ஃபேஸ்புக்கில் போட்டு எக்கச்சக்க லைக்குகளை வாங்கிக் குவிக்கிறார் மமத பானர்ஜி!