சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்றத்தாழ்வை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் கச்சா விலையில் தினமும் மாற்றம் இருந்தாலும், இந்தியாவில் பெட்ரோல் விலையை அவ்வப்போது அதிகரிக்கவும், குறைக்கவும் முடியாத நிலை உள்ளது.
இதனால் சில நேரங்களில் எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் திடீர் பெட்ரோல் விலை உயர்வினால், நாட்டில் மக்களிடையே எதிர்ப்பு கிளம்புகிறது. இதை தவிர்க்கும் வகையில் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கும் முறையை அறிமுகப்படுத்த மத்திய எண்ணெய் நிறுவனங்கள் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் ஆகிய நாடுகளில் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதே முறையை இந்தியாவில் பின்பற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்தியாவில் மாதந்தோறும் 15ம் தேதி மற்றும் மாதத்தின் கடைசி நாளிலும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது. ஆனால் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு அவ்வப்போது மாறுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையிலும் ஏற்றத்தாழ்வு இருப்பதால், இந்த முறை கைவிடப்பட்டது.
தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டால், பெட்ரோல் பங்க்களில், தினமும் அறிவிக்கப்படும் விலையில் பெட்ரோல் விற்கப்படும். இதில் ஆட்சியாளர்களின் தலையீடு இருக்காது. மாதந்தோறும் பெட்ரோல் விலையை நிர்ணயித்தால், விலையில் அதிக ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். ஆனால் தினமும் பெட்ரோல் நிலை நிர்ணயித்தால், குறைந்த அளவிலேயே பெட்ரோல் விலை ஏற்றம் அமல்படுத்தப்படும். இதனால் நுகர்வோருக்கு அதிக பாதிப்பு இருக்காது.
ஆனால் இந்தியாவில் தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிப்பதில் சில பிரச்சனைகள் உள்ளது. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் எல்லா பகுதிகளிலும் பெட்ரோல் ஒரு விலையில் விற்கப்படுகிறது. எனவே தினமும் பெட்ரோல் விலை நிர்ணயித்து, அமல்படுத்துவது எளிது. ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பெட்ரோல் விலை வேறுபடுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப தினமும் பெட்ரோல் விலை நிர்ணயிப்பது கடினம். எனவே வாரம் ஒரு முறை பெட்ரோல் விலை நிர்ணயிப்பது இந்திய சூழ்நிலைக்கு ஏற்றது.