நெல்லை: காற்றாலை மின் உற்பத்தியில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதால் மின்தடை நேரம் மேலும் அதிகரி்த்து வருகிறது. இதனால் மக்கள் தமிழக அரசையும் மின் வாரியைத்தையும் சபித்து வருகின்றனர்.
காற்றாலைகளை நம்பி கடந்த 5 மாதங்களாக காலத்தை கடத்திய மின்வாரியம் தென்மேற்கு பருவக் காற்று குறைந்ததால் தற்போது நாள்தோறும் 9 மணி நேரம் கூட மின் வினியோகம் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு்ள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஒரு வாரமாக நெல்லை மற்றும் ஈரோடு காற்றாலை மண்டலங்களில் இருந்து 1,500 மெகாவாட் மின்சாரம் கூட தொடர்ச்சியாக பெறமுடியவில்லை.
அதிகாலை மற்றும் மாலை வேளையில் சிறிது நேரம் காற்று வீசும்போது மட்டும் கிடைக்கும் சொற்ப அளவு மின்சாரத்தை பகிர்ந்து அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பகலில் தொடங்கி நேற்று பகல் வரை மின்தடை உச்சகட்டத்தை எட்டியது. சில இடங்களில் 15 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக மின் வினியோகம் செய்ய முடியவில்லை.
இது குறி்த்து மின்வாரியத்தினர் கூறுகையில்,
காற்றாலை மின் அலைவரிசை சீராக இல்லாமல் அடிக்கடி குறைந்ததால் வேறு வழியின்றி நிலைமையை கண்காணித்து அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டது என்றார்.
கடந்த 4 தினங்களுக்கு முன் இரு மண்டல காற்றாலைகள் மூலம் மொத்தம் 311 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்ததாக மின் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாலை 6 மணிக்கு மேல் மின் நுகர்வு பல மடங்கு அதிகரிக்கிறது. வர்த்தக நிறுவனங்களுக்கு 3 மடங்கு தேவையும், வீடுகளுக்கு இரண்டு மடங்கு தேவையும் இருப்பதால் அந்த நேரத்தில் தேவையான மின்சாரத்தை வழங்க முடியாத நிலையில் அனைத்து பகுதிகளிலும் இரவு முழுவதும் இருளிலேயே கழிகிறது.