தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கப்பலில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள பிரவுன் ஷுகரை கடத்திச் செல்ல முயன்ற கப்பல் ஊழியரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த 26ம் தேதி மாலத்தீவைச் சேர்ந்த எம்வி ஆசியன் எக்ஸ்பிரஸ் என்ற சரக்கு கப்பல் வந்தது. இரண்டாவது தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த கப்பலில் தற்போது மாலத்தீவுக்கு ஜல்லி, மணல், குண்டுக்கல் ஆகியவை ஏற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த கப்பலில் பணியாற்றி வரும் மாலுமிகள், ஊழியர்கள் தூத்துக்குடி நகருக்குள் வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கப்பலுக்கு திரும்பினர்.
அவர்களை அந்த கப்பலின் முகவராக செயல்பட்ட ஷிப்பிங் நிறுவனத்தினர் அழைத்துச் சென்றிருந்தனர். அப்போது கப்பல் ஊழியர்களிடம் துறைமுக நுழைவு வாயிலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த கப்பல் ஊழியர்களில் ஒருவர் உணவு பொட்டலங்களுக்கு மத்தியில் போதை மருந்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவரை பிடித்து சுங்க இலாகா சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் மாலத்தீவைச் சேர்ந்த மூசா என்பவரது மகன் முகமது மூசா என்பதும், அவர் தூத்துக்குடியில் உள்ள சிலரிடமிருந்து போதைப் பொருளான பிரவுன் ஷுகரை கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 1 கிலோ 350 கிராம் எடை கொண்ட பிரவுன் ஷுகரை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ. 1.5 கோடி என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications