கோவை: தொடர் மின்வெட்டைக் கண்டித்து கோவையில் நேற்று நடந்த மாபெரும் வேலைநிறுத்தத்தில் 30,000க்கும் மேற்பட்ட பெரிய, நடுத்தர, சிறிய தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதனால் நேற்று ஒரே நாளில் ரூ. 150 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பம்ப்செட், ஜவுளி, நூற்பாலை, விசைத்தறி, என்ஜினியரிங் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்கூடங்கள் உள்ளன. இவற்றில் பல லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
தற்போதைய கடும் மின்வெட்டால் இந்த தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல நூறு சிறிய தொழிற்கூடங்கள் மூடப்பட்டு விட்டன. தொழிலாளர்கள் வேலையில்லாமல் நடுத்தெருவுக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
16 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாவதால் எந்த வேலையையும் செய்ய முடியாமல் தொழிற்கூடங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் ஒரே மாதிரியாக மின்வெட்டை அமல்படுத்த வேண்டும். சென்னையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததன.
அதன்படி கோவை, கணபதி, ஆவாரம்பாளையம், பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனங்களுக்கு உதிரிபாகங்கள் செய்து தரும் சிறு, குறுந்தொழில் கூடங்கள், கிரைண்டர்கள், வார்ப்படத் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன.
கோவை சுந்தராபுரம் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் வியாழக்கிழமை நடந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் மூடப்பட்டிருந்தன. இந்த ஸ்டிரைக்கால் நேற்று ஒரே நாளில் ரூ. 150 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாம்.