சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள 1870 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்காக இன்று நடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 9 லட்சத்து 72 ஆயிரம் பேர் கலந்து கொண்டு எழுதினர்.
தமிழகத்தில் 1870 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று நடத்தியது. இதில் 10வது வகுப்பு முதல் என்ஜீனியர்கள் வரை பல தரப்பட்டவர்களும் விண்ணப்பித்திருந்தனர். கிட்டத்தட்ட 9 லட்சத்து 72 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. தேர்வு எழுதுவோர் வெப் காமரா மூலம் கண்காணிக்கப்பட்டனர். இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால் நேரடியாக வேலைதான். எனவே எழுதிய அனைரும் பெரும் எதிர்பார்ப்புகளை முகத்தில் தேக்கியபடி இருந்ததைக் காண முடிந்தது.
தேர்வு குறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் நடராஜ் கூறுகையில், வி.ஏ.ஓ. தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும். விடைகள் இன்று மாலையே இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்களின் விடைத்தாள் நகல்கள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியாகும்.
குரூப்-2 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். எனவே இனி டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்றார்.
சென்னையில் தேர்வு நடந்த மையத்திற்குச் சென்று நேரடியாக கண்காணித்தார் நடராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.