நெல்லை: மழை இன்மை மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக கால்நாடுகளுக்கு மேய்ச்சல் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கால்நாடுகளுக்கு தீவணங்கள் உணவாக வழங்கப்படுவதால், அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட விவசாயிகள் அதிகளவில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கால்நாடுகளுக்கு புல், வைக்கோல் செடிகள், இலை தழைகள் ஆகியவை உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழையின்மை மற்றும் தொடர் வெயில் காரணமாக வைக்கோல், புல் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் கால்நடைகளுக்கு கடைகளில் விற்கப்படும் தீவணங்களை உணவாக கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கால்நடை தீவணங்களின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.
ரூ.600க்கு விற்கப்பட்ட 50 கிலோ கலப்பு தீவணத்தின் விலை தற்போது ரூ.1200 ஆக உயர்ந்துள்ளது. புண்ணாக்கு, பருத்தி கொட்டை ஆகியவை ரூ.600 இருந்து ரூ.1400 ஆக உயர்ந்துள்ளது. ரூ.2க்கு கிடைத்த ஒரு கிலோ தவிடு தற்போது ரூ.10க்கு விற்கப்படுகிறது.
ரூ.10க்கு விற்கபட்ட வெள்ளை சோளத்தின் விலை தற்போது 4 மடங்கு உயர்ந்துள்ளது. கால்நடைகளுக்கான வைக்கோல் தேவைகேற்ப கிடைப்பதில்லை. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் கேரளாவுக்கு வாங்கி செல்லப்படுகிறது. இதனால் உள்ளூரில் தட்டுபாடு ஏற்பட்டு, விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
புல், செடி கொடிகள் ஆகியவை கிடைக்காமல் அவதிப்பட்ட விவசாயிகள், தற்போது தீவணங்களின் விலை உயர்வை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பல விவசாயிகளும் கால்நடைகளை வளர்க்க முடியாமல், பாதி விலைக்கு அவற்றை விற்று வருகின்றனர்.