
குறைந்த ஊதியம், அதிக வேலைப்பளூ உள்ளிட்ட பல பிரச்னைகளால் மாருதி தொழிற்சாலைகளில் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. மேலும், நிர்வாகத்தின் மீதான கோபத்தால் கடந்த ஜூலையில் மானேசர் ஆலையில் நடந்த தொழிலாளர்களின் வன்முறைக்கு அதிகாரி ஒருவர் பலியானார். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிலாளர் பிரச்னைகளை தீர்ப்பதற்கு மாருதி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்களின் சம்பளத்தை திடீரென 75 சதவீதம் உயர்த்திய அந்த நிறுவனம் பல்வேறு சலுகைகளையும் அறிவித்தது. இதற்கு தொழிலாளர்கள் பெரும் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், அடுத்து தொழிலாளர்களின் மனம் குளிரும் செய்தியை மாருதி அறிவித்துள்ளது. 5,000 தொழிலாளர்களுக்கு குறைந்த விலையில் வீடுகளை கட்டித் தர இருப்பதாக அநத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தலைமை நிர்வாக அதிகாரி சித்திக் கூறுகையில்," தொழிலாளர்களுக்கு பட்ஜெட் வீடுகளை கட்டித் தர உள்ளோம். வீடு கட்டுவதற்கான இடத்தை அக்டோபர் மத்தியில் இறுதி செய்து விடுவோம்.
இதனிடையே, தொழிலாளர் கூட்டுறவு சங்கம் ஒன்றையும் அமைக்க உள்ளோம். வீடு கட்டும் பொறுப்பு இந்த கூட்டுறவு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும். அதுவரை இதற்கான பூர்வாங்கப் பணிகளை மாருதி நிர்வாகம் மேற்கொள்ளும்.
வீடு வாங்குவதற்கு ஏதுவாக வங்கிகள் வழியாக எளிய முறையில் தொழிலாளர்கள் கடன் பெறுவதற்கு மாருதி நிர்வாகமே ஏற்பாடு செய்யும். குர்கான் மற்றும் மானேசர் ஆகிய இரு ஆலை தொழிலாளர்களுக்கும் சேர்த்தே இந்த திட்டம் செயல்படுத்தப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications