திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கை தலைமுடி ரூ.30 கோடிக்கு ஏலம் போனதாக, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை தலை முடி காணிக்கை அளிக்க பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி ஏழுமலையான கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அப்போது சாமிக்கு நேர்த்தி கடனாக தங்களின் தலைமுடியை பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இதற்காக திருமலையில் 18 இடங்களில் இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் செலுத்தும் தலைமுடி இருப்பு வைக்கப்பட்டு ஏலம் விடப்படுவது வழக்கம்.
கடந்த 3 மாதங்களாக சேகரிக்கப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்த காணிக்கை தலைமுடி, கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் மார்க்கெட்டிங் துறை சார்பாக தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ முன்னிலையில் இ.டெண்டர் மூலம் ஏலம் விடப்பட்டது.
அதில் நீளமாக உள்ள 5,700 கிலோ எடையுள்ள முதல் ரக தலைமுடி ரூ.11 கோடியே 45 லட்சத்திற்கு ஏலம் போனது. 9,200 கிலோ எடையுள்ள 2வது ரக தலைமுடி ரூ.17 கோடியே 16 லட்சத்துக்கும் ஏலம் விடப்பட்டது. இதர ரக தலைமுடி போன ஏலத்தொகையும் சேர்த்து, மொத்தம் ரூ.30 கோடிக்கு ஏலம் விடப்பட்டது என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
நவராத்திரி பிரம்மோற்சவம் விழா சிறப்பு ஏற்பாடு:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வரும் 15ம் தேதி முதல் கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்க திரளான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், பக்தர்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
லட்டு பிரசாதம் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருக்காமல் உடனடியாக தலைமுடி காணிக்கை செலுத்தும் வகையில், கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கூடுதலாக இலவச அன்னதானமும் வழங்கப்படும் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications