நெல்லை: தீபாவளி பண்டிக்கைக்காக சொந்த ஊர்களுக்கு வர திட்டமிட்ட பலருக்கும், ரயிலில் முன்பதிவு கிடைக்கவில்லை. இதனால் அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் மாதம் 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளி ஊர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் வேலை செய்யும் மக்கள், சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் பயணிகளின் நெரிசல் அதிகமாக இருக்கும்.
நெரிசலை தவிர்க்கும் வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த 9ம் தேதி முதல் துவங்கியது. சென்னையை தலைமையிடமாக கொண்டு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, மார்த்தாண்டம், நாகர்கோவில் உள்பட 20 கிளைகள் மூலம் சுமார் 1,580 பஸ்கள் நெடுதூர பயணங்களுக்கு இயக்கப்படுகின்றன.
தற்போது ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்ட நிலையில் அரசு பஸ்களில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பஸ் பயணிகளுக்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நீண்ட தூர பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இது தற்போது மாற்றம் செய்யப்பட்டு 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications