இந்திய-அமெரிக்க சமூக சேவை(ஐஏசிஎஸ்) என்ற அமைப்பு வரும் 17ம் தேதி சிகாகோவில் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இதில் சர்வதேச அளவில் முன்னணி நிறுவனங்களான ஐபிஎம், இன்போசிஸ், அப்பார்ட் லாப்ஸ், ஹெச்.சி.எல், நியூயார்க் லைப் இன்ஸ்சூரன்ஸ், கேட்டர்பில்லர், வல்கிரீன்ஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளன.
இந்த முகாம் மூலம் அனுபவமற்றவர்கள், குறைந்த அனுபவம் கொண்டவர்கள், அதிக அனுபவம் கொண்டவர்கள் என்று 3 நிலைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். முகாமில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி நிர்வாகம், கணக்கு துறை, தொழிற்நுட்பம் பொறியியல், மருத்துவம், மார்க்கெட்டிங், விற்பனை, தகவல்தொடர்பு போன்ற துறைகளுக்கு தகுதியான பணியாளர்களின் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஏசிஎஸ் அமைப்பின் தலைவர் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது,
அமெரிக்காவில் இது போன்ற பெரிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்தும் முதல் இந்திய அமைப்பு ஐஏசிஎஸ் தான். கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறோம். இதற்கு சிகாகோ நகரில் உள்ள வேலை தேடுவோர் மற்றும் சிறந்த பணியை தேடுவோர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நாங்கள் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் எண்ணற்ற மக்கள் பயன் பெற்று வருகின்றனர் என்றார்.