ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில அரசு மண்ணெண்ணைக்கான வாட் வரியை குறைத்துள்ளது. அதற்கு பதிலாக புகையிலை பொருட்களின் வரியை அதிகரித்துள்ளது.
ஜார்க்கண்ட மாநில முதல்வர் அர்ஜூன் முண்டா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பொருளாதார நிலை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது மக்களுக்கு அதிகம் பயன்படும் மண்ணெண்ணை மீதான வாட் வரியை 5 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக மக்களுக்கு உடல்நிலைக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்களின் மீதான வாட் வரியை மாநில அரசு அதிகரித்துள்ளது. இதன்படி புகையிலை பொருட்களுக்கான வாட் வரி 14 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது மண்ணெண்ணை ஒரு லிட்டர் ரூ.14.19 என்று விற்கப்படுகிறது. தற்போது மண்ணெண்ணைக்கான வாட் வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து இனி லிட்டர் ரூ.13.76 என்று விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.