தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிலோ போலி தேயிலையை, உணவு கட்டுபாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடியில் மாளிகை கடைகள் மற்றும் டீக்கடைகளில் போலி தேயிலை புழக்கத்தில் விடப்படுவதாக உணவு கட்டுபாட்டு நியமன அதிகாரி ஜெகதீச சந்திரபோஸூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையிலான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தூத்துக்குடி ஐயப்ப நகரில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது வீட்டில் பல வண்ணங்களினாலான கவர்களில் அடைக்கப்பட்ட தேயிலை பாக்கெட்கள் அடுக்கி சிக்கின. இவற்றை உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அந்த தேயிலை பாக்கெட்கள் அனைத்தும் லியோ, அசாம் கோல்டு, கோல்டன் ரோஸ், டாப் 10 போன்ற பிரபல நிறுவனங்களின் பெயர்களில் தயார் செய்யப்பட்டு இருந்தது. மேலும் அவற்றில் தயாரிக்கப்படும் இடம், முகவரி போன்ற எந்த தகவல்கள் இருக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்த 400 கிலோ எடை கொண்ட தேயிலை பாக்கெட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தேயிலை பாக்கெட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறைக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தேயிலையின் மாதிரிகள், பாளையங்கோட்டையில் உள்ள ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உண்மையான தேயிலையுடன், போலி தேயிலையை கலந்து விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது. 10 கிலோ நல்ல தேயிலைக்கு 2 கிலோ போலி தேயிலை என்ற ரீதியில் கலப்படம் செய்துள்ளனர். பிடிபட்ட போலி தேயிலையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.